ஞாயிறு, 17 ஜூலை, 2016

இறைவனால் இயற்கை -இயற்கையில் இறைவன்

1.இயற்கை உண்டு இறைவன் இல்லை என்கிறார் இங்கு சிலர்
   இறைவனால் இயற்கையும் இயற்கையில் இறைவனும் என்றவர் அறிந்திலர்
   இயற்கையெனும் விருந்தினை யார் சமைத்தார் தரணியிலே
   இறைவனும் இறைவியும் சேர்ந்து செய்த விந்தை இது

2. நான் எனது என்கிறார் இங்கு இவர்
   தான் யார் என்பது ஏனோ அறிந்திலர்
   மூலத்தின் கூறாய் தாம் வந்தது தெரியவில்லை
   காலம் வேறாய்  ஆனபின் உணர்வாரோ

3.  கருவினை உருவாக்கி  உயிர் கொடுப்பேன் என்கிறார்
     செருக்கினால் பேசுகிறார்  பெருமை மிகவே  கொள்கிறார்
     தனக்கும் மேல் இருப்பவனை அறியவில்லை
     மனக்குறை நீக்கும் மூலப் பொருள்  தெரியவில்லை

4.  கருவினின்று  உருவா  உருவினின்று கருவா
     விதையினின்று  செடியா  செடியினின்று  விதையா
     எதைக் கொண்டு எதைப் பெற்றோம் என்பது யார் அறிவார்
     கருவுக்கு விந்துவும் தருவுக்கு விதையும் யார் இங்கு கொண்டு தந்தார்

5.   வினா உண்டு  விடை இல்லை  என்ன இது  விசித்திரம்!
      அனாதி காலமாய்  தொடர்ந்து  வரும்  சரித்திரம் !
      கனாக் கண்டது போல்  பிறப்பதுவும்  இறப்பதுவும்
      வினோதமாய்  மாறி  மாறி  சுற்றும் ஒரு சக்கரம்

6.   விஞ்ஞானம்  கற்றுணர்ந்து   மெய்ஞ்ஞானம் புரிந்துணர்ந்து
      அஞ்ஞான இருள் நீக்கி  இறைஞானம்  உய்த்துணர்ந்து
      பொய்யானவற்றை  விட்டொழித்து  விழித்துணர்ந்து
      மெய்யாக  வாழ்ந்திடுவோம் மெய்ப்பொருளைக் கண்டறிவோம்