செவ்வாய், 17 மார்ச், 2020

ரோகமே நீ வேகமாகப் போய்விடு

நோய்க்கொரு மருந்தில்லை
ஓய்வெடுக்க நேரமில்லை
போய்க்கொண்டிருக்குது காலம்
தோய்ந்தருக்குது உலகு துயரில்

மருந்தொன்று கண்டோம் பிணி தீர்க்க என்கிறார்
இருந்து வாழ்ந்திடவே வழியொன்றும் சொல்கிறார்
விருந்தொன்றும் வேண்டாம் இன்றிங்கெங்களுக்கு
திருந்தி மட்டுமே வாழ்ந்திருந்தால் வரும்சுகம் என்றிடுவேன்

எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் தெரியவில்லை
இங்கே எதுவுமே நன்றாகவே இல்லை
அங்கே இங்கே என்று எங்கேயும் ரோகமென்றால்
எங்கே செல்வது அடைக்கலம் யார் தருவர்?

மோகத்தை எல்லாம் விட்டொழித்து வாழ்ந்திருந்து
போகத்தையெல்லாம் இங்கு சற்றேனும் மறந்திருந்து
யோகாசனம் பயின்று தியானத்தில் அமர்ந்திருந்தால்
வேகமாக வரும் இறை வினை தீர்ப்பர் உண்மை அன்றோ

-The painful thought of the Coronavirus pandemic led to this outburst last night.

புதன், 11 மார்ச், 2020

வருவாய் அருள்வாய் இறைவா

                        
              1. பெரியவனாய் மிகமிகப் பெரியவனாய்  வளர்ந்து நின்றாய்
             
                 அரிய பெரிய  தத்துவத்தைப்  போர்க்களத்தில் பேசிநின்றாய்

                 உரியதொரு  தருணமதில்  உண்மைகளை உரைத்துநின்றாய்

                 சிரித்தபடி  பார்த்தனுக்கு  சீரியவை சொல்லிநின்றாய்


              2. கள்ளத்தனம்செய்து  கயிற்றினால் கட்டுண்டாய்

                  பிள்ளைகளுடன்கூடி  களவாடி களி கொண்டாய்

                 அள்ளிஅள்ளி வெண்ணையுண்டு அன்னையிடம் சிக்குண்டாய்

                 வெள்ளை மனத்தவனாய்  உள்ளமதை கொள்ளை கொண்டாய்


              3.சின்னவனாய் இருக்கையிலே  பெரியவையாய்  பலசெய்தாய்

                 அன்னையென்று  வந்தவளை உயிர்குடித்து அழியவிட்டாய்

                 பின்னை ஒருநாளில் பகைகெடுக்கப்பரிந்துவந்தாய்

                 என்னே உன்லீலைகள்  என்றெனை பாடவைத்தாய்


             4.உணர்வுகளும்  உணர்ச்சிகளும்  கொடுத்தெமை ஆடவிட்டாய்

                மணம்கமழும் கீதையினை  பார்த்தனுக்கு போதித்தாய்

                பிணங்குகொள்  மனதினை  நிலைப்படுத்த வழிசொன்னாய்

                இணங்கி அதுவந்துவிட்டால்  அறிவேன் நீ எமைக்காப்பாய்

சனி, 7 மார்ச், 2020

நீயேஎன்தாய்


1. அன்னை அடித்தால் அவளையே சென்றணைத்து

   கன்னமொடு கன்னம் வைத்து அழுதிடும் மதலைபோல்

   என்னை நீ சோதனையால் எத்தனைதான் அடித்தாலும்

   உன்பதமே பற்றி கண்ணீரால் கழுவிடுவேன்


2. அழுது அடம் செய்து சாதித்திடும் குழவிபோல்

   விழுந்தெழுந்து தப்பாமல் எப்போதும் உனைவேண்டி

   தொழுது உன்னிடம் துயர்சொல்லி அழுதிடுவேன்

   வழுத்தி உனை இரந்து வேண்டியது பெற்றிடுவேன்


3. விளையாடும் குழந்தை பெற்றவளை நினைப்பதில்லை

   விழுந்து காயமுற்றால் அம்மாவென வருவதுபோல்

   விளையாடும் என்வினை எனைவென்று நகைக்கயில்

   அழுந்தும் வாதனையால் இறைவா உனை சரணடைவேன்


4. உன் நினைவு என்னுள்ளே குருதிபோல் ஓடிடினும்

   என் மனம் மயங்கி சற்றுன்னை மறந்திடினும்

    மன்னித்து நீ எனை ஏற்பாய் நான்அறிவேன்

    என்னுடைய தாய் நீதான் இறையோனே