புதன், 26 ஆகஸ்ட், 2020

வைரஸ் எனும் வைரி

                                   1.கரோனா  எனும்  பெயர்  கொண்ட  வைரி இங்கு 

                                     நரனுக்குக்    கொடுத்துவரும்   இடர்களை  நீக்கிவிட 

                                     நாரணன் வருவானா  சுதர்சனனுடனே   அல்லது 

                                     ஹரன்வந்து  நிற்பானா சூலமதை   கையில்  கொண்டு  


                                   2. ராமன்  வருவானா  வில்லும்  அம்பும்  ஏந்தி

                                      ராவணனை  அழித்தது போல்  வைரியை  அழிப்பானா 

                                      கரோனாவை  ஓடவிட்டு   உலகைவிட்டொழித்துவிட்டு 

                                       கரம்கொடுத்து  காத்துநின்று  உய்வித்துச் செல்வானா 


                                   3. சிரஞ்ஜீவி  அனுமன்  இங்கு  சீக்கிரமே  வருவானா 

                                       சஞ்ஜீவினி  கொண்டுவந்து  சங்கடம்  தீர்ப்பானா 

                                      மிஞ்சிவரும்  வைரியை வையம் விட்டு  ஒழிப்பானா 

                                      அஞ்சேலென்று  சொல்லிவந்து  தஞ்சம்  அளிப்பானா 


                                   4. ஐங்கரன்  வருவானா  இங்கெமை  காப்பானா 

                                       சங்கரன் மகன் இவன்  ஆனையாகவே  வந்து 

                                       எங்கெங்கும்  பரவிவரும்  வைரிதனை  மிதித்தழித்து 

                                       சங்கடங்கள்  தீர்த்துவைத்து  மங்கலங்கள்  கொடுப்பானா 


                                     5.கந்தசாமி  வருவானா  கைவேலுடன்   வருவானா 

                                        இந்த  மானுடம்  படும்  துயரை  துரிதமாய்  தீர்ப்பானா 

                                        வந்திருக்கும்  வைரியை  வேலெறிந்து  வெல்வானா 

                                         சொந்தங்கள்  காப்பானா  துணையாய்  இங்கிருப்பானா 


                                      6. யாதுமாகி  நின்ற  காளி  இங்குவந்து  நின்றுகொண்டு 

                                          தீது செய்யும்   வைரிதனை  நிராயுதபாணியாக்கி 

                                          ஏதும் இல்லதாகி ஓடும் விந்தைதனை  செய்வாளா 

                                           மாது அவள் நம் அன்னை  நமைகாக்க  வருவாளா 


                                      7. இறைசக்தி  பல உருவில்  வந்திருந்து சென்றதுண்டு 

                                          விரைந்து இன்று அனைத்துருவும்  ஓர் உருவாய் வந்திடுமோ 

                                           மறைந்திருந்து   வைரியை  மரித்துவிட்டுச் சென்றிடுமோ 

                                           குறையகற்றி  மனித இனம் மகிழ்ச்சியுறச் செய்திடுமோ

செவ்வாய், 17 மார்ச், 2020

ரோகமே நீ வேகமாகப் போய்விடு

நோய்க்கொரு மருந்தில்லை
ஓய்வெடுக்க நேரமில்லை
போய்க்கொண்டிருக்குது காலம்
தோய்ந்தருக்குது உலகு துயரில்

மருந்தொன்று கண்டோம் பிணி தீர்க்க என்கிறார்
இருந்து வாழ்ந்திடவே வழியொன்றும் சொல்கிறார்
விருந்தொன்றும் வேண்டாம் இன்றிங்கெங்களுக்கு
திருந்தி மட்டுமே வாழ்ந்திருந்தால் வரும்சுகம் என்றிடுவேன்

எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் தெரியவில்லை
இங்கே எதுவுமே நன்றாகவே இல்லை
அங்கே இங்கே என்று எங்கேயும் ரோகமென்றால்
எங்கே செல்வது அடைக்கலம் யார் தருவர்?

மோகத்தை எல்லாம் விட்டொழித்து வாழ்ந்திருந்து
போகத்தையெல்லாம் இங்கு சற்றேனும் மறந்திருந்து
யோகாசனம் பயின்று தியானத்தில் அமர்ந்திருந்தால்
வேகமாக வரும் இறை வினை தீர்ப்பர் உண்மை அன்றோ

-The painful thought of the Coronavirus pandemic led to this outburst last night.

புதன், 11 மார்ச், 2020

வருவாய் அருள்வாய் இறைவா

                        
              1. பெரியவனாய் மிகமிகப் பெரியவனாய்  வளர்ந்து நின்றாய்
             
                 அரிய பெரிய  தத்துவத்தைப்  போர்க்களத்தில் பேசிநின்றாய்

                 உரியதொரு  தருணமதில்  உண்மைகளை உரைத்துநின்றாய்

                 சிரித்தபடி  பார்த்தனுக்கு  சீரியவை சொல்லிநின்றாய்


              2. கள்ளத்தனம்செய்து  கயிற்றினால் கட்டுண்டாய்

                  பிள்ளைகளுடன்கூடி  களவாடி களி கொண்டாய்

                 அள்ளிஅள்ளி வெண்ணையுண்டு அன்னையிடம் சிக்குண்டாய்

                 வெள்ளை மனத்தவனாய்  உள்ளமதை கொள்ளை கொண்டாய்


              3.சின்னவனாய் இருக்கையிலே  பெரியவையாய்  பலசெய்தாய்

                 அன்னையென்று  வந்தவளை உயிர்குடித்து அழியவிட்டாய்

                 பின்னை ஒருநாளில் பகைகெடுக்கப்பரிந்துவந்தாய்

                 என்னே உன்லீலைகள்  என்றெனை பாடவைத்தாய்


             4.உணர்வுகளும்  உணர்ச்சிகளும்  கொடுத்தெமை ஆடவிட்டாய்

                மணம்கமழும் கீதையினை  பார்த்தனுக்கு போதித்தாய்

                பிணங்குகொள்  மனதினை  நிலைப்படுத்த வழிசொன்னாய்

                இணங்கி அதுவந்துவிட்டால்  அறிவேன் நீ எமைக்காப்பாய்

சனி, 7 மார்ச், 2020

நீயேஎன்தாய்


1. அன்னை அடித்தால் அவளையே சென்றணைத்து

   கன்னமொடு கன்னம் வைத்து அழுதிடும் மதலைபோல்

   என்னை நீ சோதனையால் எத்தனைதான் அடித்தாலும்

   உன்பதமே பற்றி கண்ணீரால் கழுவிடுவேன்


2. அழுது அடம் செய்து சாதித்திடும் குழவிபோல்

   விழுந்தெழுந்து தப்பாமல் எப்போதும் உனைவேண்டி

   தொழுது உன்னிடம் துயர்சொல்லி அழுதிடுவேன்

   வழுத்தி உனை இரந்து வேண்டியது பெற்றிடுவேன்


3. விளையாடும் குழந்தை பெற்றவளை நினைப்பதில்லை

   விழுந்து காயமுற்றால் அம்மாவென வருவதுபோல்

   விளையாடும் என்வினை எனைவென்று நகைக்கயில்

   அழுந்தும் வாதனையால் இறைவா உனை சரணடைவேன்


4. உன் நினைவு என்னுள்ளே குருதிபோல் ஓடிடினும்

   என் மனம் மயங்கி சற்றுன்னை மறந்திடினும்

    மன்னித்து நீ எனை ஏற்பாய் நான்அறிவேன்

    என்னுடைய தாய் நீதான் இறையோனே

வியாழன், 16 ஜனவரி, 2020

மஹாபெரியவா


                                  1. அன்று இவ்வுலகம்  அளந்தான்  பெரியவன்

                                     இன்றிங்கு நம்மிடையே  ஒளிர்ந்தார்  பெரியவா

                                     சென்றங்கு இருந்துகொண்டு ஒளிக்காட்டி வழிகாட்டி
                 
                                     என்றென்றும் கருணையுடன் கைபிடித்துச் செல்லட்டும்


                                 2.  காலடிஆசானின் பாதையில் சென்று அவர்

                                      காலடிச் சுவடுகளை ஆதாரமாய்பற்றி

                                      மாலடியைப் பற்றிவிட்டால் குறையொன்றும் இலையென்று

                                      நாலடியில் நவின்று நமை நன்மைபெறச் செய்துவிட்டார்

 
                                  3. சங்கரனும் ஐங்கரனும் ஷண்முகனும் சேர்ந்து
 
                                     சங்கரனாய்  இங்கெமை  உய்விக்க வந்தனரோ

                                     திங்களும் ஆதித்யனும்  எழுந்தாற்போல் வந்து

                                      தங்கமாநகர் காஞ்சியில் சிங்கமாய் அமர்ந்தாரோ


                                 4. அன்று அந்த ஸ்வாமிநாதன் தகப்பனுக்கு குருவானார்

                                     இன்றிந்த ஸ்வாமிநாதன் உலகுக்கே குருவானார்

                                     பாலனாய் காஞ்சிவந்து துறவியாய்  அமர்ந்தாரே

                                     சீலனாய் நமையெல்லாம் வழிநடத்திச் செல்கிறாரே

புதன், 8 ஜனவரி, 2020

கிட்டிடுமோ வெட்டவெளி !?

1. ஆகாசம் என்றால்  வெட்டவெளி  என்கிறார்

    போகாத ஊருக்கு  வழி எங்கே என்றிடாமல்

    யோகாசனம் பயின்று  நிட்டையில் ஆழ்ந்துவிட்டால்

   நோகாமல்  மனம் சென்று  ஆகாயம்  தொடும் என்றார்


2. எட்டிஎட்டிப் பார்க்கிறேன் எட்டவில்லை அது எனக்கு

    கிட்டத்தில் அதுஇல்லை தொட்டுணர முடியவில்லை

    கிட்டமாட்டேன் என்று அது  அங்கேயே இருக்கிறது

    எட்டத்தில் இருந்துகொண்டு  எல்லையற்று விரிகிறது

                    
3. தொட்டிடுவேன் மனதால் ஆகாயத்தை என்று

    திட்டமிட்டு அமர்ந்து  தியானம் செய்ய முயல்கின்றேன்

    கட்டவிழ்ந்து ஓடும்  மனத்தைக் கட்டிவைத்து அமர்ந்திருந்தால்

    இட்டதெய்வமும் குருவும்  இயைந்துவந்து அருள்வாரோ


4. கட்டிவந்த மூட்டையை  விட்டொழிக்க ஏலாது

    கிட்டியுள்ள பிறவியிலும்  மூட்டை கட்டலாகாது

    நாட்டமெலாம் விட்டொழித்து  நல்லதையே நினைத்திருந்தால்

   ஆட்டமெல்லாம் ஓயும் முன்பு  வெட்டவெளியைத் தொடுவேனோ

திங்கள், 20 மே, 2019

நரஸிம்மாவதாரம் - அந்தாதி

ராகமாலிகை - தாளம்:ஆதி  

 

1.சுத்ததன்யாசி :

பரமன்  எடுத்த  பத்தவதாரங்களில்

நரஸிம்மமாய்  வந்தான்  நான்காவதிலே

பரலோகத்தில்  ஒருவன்  தான் பெற்ற சாபத்தினால்

ஹிரணியன் எனும்  பெயரில்  அரக்கனாய்  வந்துதித்தான்


2.பாகேஸ்ரீ :

வந்துதித்த ஹிரணியன்  நந்தகோபன் மகனை

எந்த நாளும்  நிந்தனையே  செய்துவந்தான்

சந்ததி கருதி அவன்  சந்ததமும்  தவமிருந்தான்

வந்த மைந்தன் பிரஹலாதன்  தந்தைக்கெதிர் வாதம் செய்தான்


 3.தர்மவதி :

வாதம் செய்து வழக்காடி  நாரணனே  தெய்வமென்று

பாதகனாம்  தந்தை  உய்ய உறுதியாய்  நின்றான்

செருக்குற்ற  ஹிரணியனும்  தானே இறை என்றான்

திருமால் நாமமதை  செப்பிட தடை  விதித்தான்


4.கரஹரப்ரியா :

தடை விதித்த  தலைவன்  சொல்கேட்டு  குடியனைத்தும்

மடை திறந்தாற் போல் அவன்  நாமமதை  நவின்றிடவும்

மாதரசி மணிவயிற்றில் வந்த மகன் பிரஹலாதன்

காதலாகி  ஓம்  நமோ  நாராயணா  என்றான்

(ஓயாமல்  ஓம் நமோ நாராயணா  என்றான் )


5.ரேவதி :

என்றவன் எப்பொழுதும்  மாயனை துதித்திடவும்

ஈன்றவன்  விசனமும் பின்  சினமும்  அடைந்தான்

கன்றை ஒரு பசு  அழிக்கும் கதை கேட்டதுண்டோ

அன்றைக்கவன்  மகனை  கொல்ல  பலவிதமாய்  முயன்றான்


6.குந்தலவராளி :

முயன்றவன்  தோல்வியுற  மைந்தனும்  பிழைத்து வந்தான்

முயற்சியனைத்தையுமே  பரமன்  முறியடித்தான்

பரமன் எங்கே என்று  பிள்ளையைக்  காட்டச்சொன்னான்

வரமதால் வந்த மகன்  எங்கும் இறை உள்ளதென்றான்


7.கானடா :

எங்கும் இறை உள்ளதென்று  மகன் சொல்ல  கேட்ட மன்னன்

அங்கிருந்த ஓர் தூணினை  ஓங்கிப் பிளந்தனன்

பிளந்ததும்  நரஸிம்மமாய்  வந்த உரு  கண்டு மன்னன்

தளர்ந்து  விதிர் விதிர்த்து  நிலை குலைந்து நின்றான்


8.பிலஹரி:

நின்றவனை பாய்ந்தெடுத்து  நிலையில் அமர்ந்து  மடியிலிட்டு

பரலோகத்தில் அளித்த வரமதை நினைவில் கொண்டு

நரனும்  மிருகமுமாய்  அந்தி பகல் சேர்  சந்தியில்

கொன்று குடலுறுவி  மீட்சி அளித்தான்


9.பிருந்தாவன சாரங்கா:

மீட்சியளித்து  சாந்தமாகி  மதலைக்கு  முடி சூட்டி

ஆட்சி செய்ய  ஆசி செய்து திரும்பினான் வைகுண்டம்

காட்சிக்கினிய  அந்த நரஹரி ரூபம்

மாட்சிமை பொருந்திய  அவதாரம்

நரசிம்ம ரூபமதை  தொழுதாலே  வைபோகமே

வரமெலாம்  தந்திடுமே  அற்புத ரூபம்

வியாழன், 28 பிப்ரவரி, 2019

நான் கண்டு களித்த பாண்டுரங்கன்

                                               
                                                  

           1.               பண்டரீபுரம்      சென்றுவந்தோம்

                             பாண்டுரங்கனைப்  பார்த்துவந்தோம்

                             கண்டு கண்டு   மனம் நெகிழ்ந்தோம்

                             அண்டை அயலிடம்  சொல்லி மகிழ்ந்தோம்


            2.              பண்டொருநாள்  புண்டலீகன்  பெற்றோர்க்கு செய்த சேவை

                             கண்டு மெச்சி கண்ணன் வந்தான் அவன் இல்லம் வந்துவிட்டான்

                             தொண்டு செய்த புண்டலீகன் அங்கவனைக் காக்க வைத்தான்

                             அண்டம் காக்கும் ஆண்டவனை செங்கல் மேல் நிற்க வைத்தான்


             3.             விண்ணின்று வந்துவிட்டு  அங்கு  அவன்  காத்திருந்தான்

                             கண்ணன் அன்று தன் இடையில் கை வைத்து நின்றுவிட்டான்

                              புண்டலீகன் மனம் நெகிழ்ந்து இங்கேயே இரு என்றான்

                              வேண்டியபடி நின்றுவிட்டான் வரம்தரவே நிற்கின்றான்


              4.              பண்டரிபுரம் என்ற ஊர் பெருமைதனை  பெற்றது

                               தொண்டனிடம் மகிழ்ந்த இறையின் உறைவிடமாய் ஆனது

                               நண்பர் ஒருவர் உதவியினால் அங்கு யாம் சென்றுவந்தோம்

                               நண்பருடன் சென்று வந்தோம் புண்ணியம் செய்திட்டோம்
   

                5.             விட்டோபா என்கின்றார் விட்டலன் என்றும் நவில்கின்றார்

                                அட்டதிக்கும் நிறைந்தவனை அங்கேயே காண்கின்றார்

                                ஆடுகிறார்   பாடுகிறார்  ஆனந்தம்  அடைகின்றார்

                                ஆசையுடன் ருக்குமாயியும்  அங்கே உறைகின்றாள்




                 

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

அகர முதல எழுத்தெலாம் அனுமனே

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு அகரம் முதல் எல்லா எழுத்துக்களிலும் கவிதை செய்து இசையமைத்து பாடுமாறு அனுமன் எனைப்பணித்து அவன்விருப்பத்தை நிறைவேற்றிக்கொண்டான்.இப்போது அனுமத் ஜயந்தியை முன்னிட்டு இந்த வலைத்தளத்தில்

இதனை அளித்துள்ளேன்.

என் மகள் ஸிந்துஜா இதனைப் பாடி அவளுடைய வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறாள்.

அவளுடைய விலாசம் கீழே உள்ளது.

https://octaves.blogspot.com/2014/02/anumane.html

ராகம் :காபி

அனுமனே அஞ்சனை மைந்தனே

அண்ணல் ராமனின் ஆருயிர் அன்பனே

இல்லாளை பிரிந்து இடருற்ற ஈசனை

உடனிருந்து காத்து ஊக்கம் அளித்தனை

எத்தனை இடர்கள் எல்லாம் கடந்தனை

ஏவல்புரிந்து ஏற்றம் பெற்றனை

ஐயன் ராமனுடன் ஐக்கியம் ஆயினை

ஒப்புவமை இல்லா ஓரிடம் சேர்ந்தனை

ஔடதம் பெற நீ சைலம் பெயர்த்தனை

அஃதினை கொணர்ந்து இளவலை காத்தனை


ராகம் :ஹிந்தோளம்

கவினுறு கானகத்தே கிஷ்கிந்தையதனில்

கீர்த்தி பெற்ற கவியரசன் வாலி வதம் அடைய

குரங்கரசன் அவன் தம்பி ஸுக்ரீவ ராஜன் உன்னை

கூவி அழைக்கத் தாவிச்சென்று கடல் கடந்தாய்

கெடுதிக்கு கேடிழைத்து கமலைக்கு கை கொடுத்தாய்

கொக்கரித்து கோபித்து கொட்டம் எல்லாம் முறியடித்தாய்

கௌசிகன் சங்கடம் சடுதியில் தீர்த்தவனை

ஸாமான்யமானவனாய் சாதிக்க வந்தவனை

சிந்தையில் பூட்டிவைத்து சீலத்தில் நீ உயர்ந்தாய்

சிறு பிள்ளை பருவத்தில் சுடும் என்று அறியாது

சூரிய பழம் பிடிக்க சீறிப் பறந்தனை

செல்வமே, சேடனே

சைனியத்துடன் ஈழத்தை வீழ்த்தினையே


ராகம் :மோஹனம்

சொக்கனே சோர்வினை போக்கிடும் சௌந்தர்ய ரூபனே

ஞாலம் போற்றும் ஞானியே

தலைவன் தாள் பணிந்து தின்மைக்குத் தீவைத்தாய்

துன்பம் துடைத்து தூயோனை காத்திட்டாய்

தென்னிலங்கை கோமானை தேசு இழக்கச் செய்தாய்

தையலைக் காத்து தொல்லையையைத் தோற்கச் செய்தாய்

தௌவைதனை நலியவிட்டு நாணியோடச் செய்திடுவாய்

நிலம் நீர் எங்கிலும் நுணுகி நீ நூறுசெய்வாய்

நெக்குருகி நேர்த்திசெய்தால் நைந்துருகி நலம் தருவாய்

நொந்துவந்த உள்ளமதில் நோவினை நீக்கிடுவாய்


ராகம்: திலங்

பரமன் அருகினில் பாங்குடன் நீ இருந்தாய்

பிறன்மனை கவர்ந்தோனை பீழையில் வீழச் செய்தாய்

புந்தியில் சிறந்து நின்றாய் பூவையைக் கண்டு வந்தாய்

பெம்மான் ராமனை பேசுவோரை நீ சென்று

பையவே பாலித்து பொழிவாய் நின்னருளை

போர்க்களத்தில் பௌருஷத்தால் பொலிந்து நீ நின்றாய்

மங்கினார் மாண்டார் மாருதி உனைக்கண்டு

மிகுந்திலர் மீண்டிலர் முன்வினை பயனால்

மூடரவர் மதிகெட்டு மெய்ம்மையை கண்டிலரே

மேன்மை நீ கொண்டாய் மையல் தரும் எழில் கொண்டாய்

மொய்க்கின்றார் மாந்தர் உன் மோஹன ரூபம் கண்டு

மௌனமாய் மறம் காட்டி மன்னவரை மலைக்க வைத்தாய்


ராகம் :ஆஹிர்பைரவ்

யமன் யாண்டும் துணிவு கொளான் சிரஞ்சீவி உனைக்கொள்ள

யுக்தி இலன் யூகித்திலன் யோகி உன்னை எதிர்கொள்ள

யௌவன ராஜன் நீ வஞ்சகரை வகிர்ந்ததெல்லாம்

வான் புகழ் வில் வீரன் வெகுண்டு உன்னை வேண்டியதற்கே

வையம் வந்த தெய்வமதை வௌவி நீயும் உயர்வடைந்தாய்

வானரமாய் வந்த வாயுமைந்தனே போற்றி

அகரமுதல எழுத்தெல்லாம் ஹனுமனுக்கர்ப்பணிக்க

அறிவிலி ஆசை கொண்டேன் ஆழம் அறியாமலே

ஈங்கீண்டு இயம்பிவிட்டேன் இச்சைகொண்டு இவ்வண்ணம்

வாயுமகன் பிழை பொறுத்து வினை தீர்த்து அருளட்டும்

செவ்வாய், 7 நவம்பர், 2017

பெரியாழ்வார்,பாரதியார் -இவர்கள் கண்ட கண்ணன்


1. விட்டுச்சித்தர் அவதரித்தார் வில்லிபுத்தூரதனில்

    எட்டயபுரம் பெற்றது பாவேந்தர் பாரதியை
 
     இருவரும் பாடினர் கண்ணனைப் போற்றினர்

     இறும்பூது எய்துகிறோம் தமிழராய்ப் பிறந்ததற்கே


2.  பரமனுக்கு விட்டுச்சித்தர் பல்லாண்டு பாடினார்

     அரங்கனின் எழில் நிலைக்க அவ்விதம் வாழ்த்தினார்

      கண்ணெச்சில் விழாதிருக்கக் காப்பிட்டுக் களிப்புற்றார்

     கண்ணனை சேயாக்கித் தான் அவனின் தாயானார்


3.  கொஞ்சிக் கொஞ்சி  அவர் வடித்த கண்ணனின் லீலைகள்

    நெஞ்சினிக்க விருந்தாயின நமக்கவர் திருமொழியில்

    தன்பிள்ளை அவன் என தாயாகித் தொட்டிலிட்டு

    அன்பின் மிகுதியால் அரவணைத்து மகிழ்ந்திட்டார்


4. அடிமுதல் முடிவரை கண்ணனை அனுபவித்தார்    

    ஓடியோடிப்போகாதே முலையுண்ண வாவென்றார்

    புழுதியளைந்த பொன்மேனி நீராட்டித் திளைத்திட்டார்

     குழல்வாரி பூச்சூட்டிப் பாமாலை அணிவித்தார்

 
 5.  பாரதியார் கண்ணனைத் தந்தையென்றார் தாயென்றார்

     சாரதியவனைத் தன் சற்குருவும் என்று சொன்னார்

     தீராத விளையாட்டுப்பிள்ளை என் பிள்ளை என்றார்

     ஆறுதல் சொல்லும் தோழனும் அவன் என்றார்

    
6.  கண்ணனடிமை நான் என்றார் ஆண்டான் அவன் என்றார்

     அண்ணல் அவன் அரசன் என்றார் காந்தனும் அவன் என்றார்

     காதலனும் சேவகனும் சீடனும் அவன் என்றார்

     ஆதலினால் அவருக்கு ஆயினன் அவன் அனைத்துமாய்

   
7.  பெண்ணாகவும் ஆக்கினார் கண்ணனை நம் கவி

      கண்ணம்மா என் குழந்தை பிள்ளைக்கனி அமுதென்றார்

     'நிலவு  அவள் ' என்று சொல்லி காதலியும்  ஆக்கிவிட்டார்

      குலதெய்வம் அவள் என்றார் அவளையே  சரணடைந்தார்


8. ஒன்பதாம் நூற்றாண்டில்  ஆழ்வார் அவதரித்தார் -பத்

     தொன்பதாம்  நூற்றாண்டில்  பாரதியார் பிறந்துவந்தார்

     ஒத்தகருத்தில் இவ்விருவர் 'பிள்ளைத்தமிழ் 'பாடியதை

     மெத்தவே வியக்கின்றேன் மகிழ்ச்சி மிக அடைகின்றேன்



   

வெள்ளி, 2 ஜூன், 2017

சூரியநமஸ்காரம்


                   1 . கிழக்கே  கதிரவன்  கிளர்ந்தெழும்   தருணமதில்
                   
                       சழக்குகள் அகற்றி ஒழுக்கமாய்  இருந்திடவும்
                   
                       வழிக்குத்துணைநின்று  ஒளிதரவேணும்  எனவும்

                       விழிக்கையில் அவனைத்தொழுது விழிப்புடன் இருந்திடுவோம்

   

                     2. ஆதவன் அருள் இலையேல்  உலகெலாம்  இருளே

                        ஆதலினால்  துதி செய்வோம்  அவன்அன்பை  உணர்ந்திடுவோம்

                         வெப்பமின்றி  உயிரில்லை  பரிதியின்றி  பயிரில்லை

                          தப்பாமல்  போற்றிடுவோம்  தலைவணங்கி  வாழ்த்திடுவோம்்,

       

                      3. பரிதியைப் பாரதி  என்னவென்று  புகல்கிறான்
       
                         'வெம்மைத் தெய்வமே', 'ஒளிக்குன்றே'  என்கிறான்

                         'அறிவின் மகள் ஒளி' அவளே தெளிவு  என்று

                          செம்மையாகச்  சொல்லிவிட்டான்  வசனத்தில் அன்று

                       
                       4. சோதிப்பிழம்பவன்  சோர்வினைப் போக்குபவன்

                           ஆதியுமாய்  அந்தமுமாய்  யாவுமாகி  விளங்குபவன்

                           சூரியனை  இதயத்தினுள்ளே  இருத்தி  வாழ்த்தி

                            வீரியம்  பெற்றிடுவோம்  ஆரியராய்  வாழ்ந்திடுவோம்

வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

கண்மணி உஷாவுக்கு என் அன்புக்காணிக்கை



போனமுறை  இந்த  வலைத்தளத்தில் வெளியான  கட்டுரை  உருவாகும்  சமயம்  எனக்கு உறுதுணையாயிருந்த  இனிய உஷா  இன்று  தெய்வமாகிவிட்டாள்.இப்போது  வெளியாகும் இந்தக்கவிதை  அந்த  உயர்ந்த  ஆத்மாவுக்கு  ஒரு  அஞ்சலி.


                           அருமையான  உஷாவே  எளிதினில்  மறைந்துவிட்டாய்
                           ஒருமையில்  உனை  அழைப்பேன்  இளையவள் நீ, இனியவள்  நீ
                           காற்றினில்  கரைந்தாயோ, விண்ணுக்கு  விரைந்தாயோ
                           ஆற்றொணாத் துயர்  கொடுத்து  மண்ணுக்குள்  மறைந்தாயோ

                           தவமிருந்து  பெற்ற தாயைத்  தவிக்கவிட்டு  எங்குசென்றாய்
                           இவளே  எனக்கெலாம்  என்றவரை  ஏன்  பிரிந்தாய்
                           கண்மணிகள்  போன்ற  பெண்களை  ஏன் மறந்தாய்
                           எண்ணி  எண்ணி  ஏன் மனம் புண்படச் செய்துவிட்டாய்

                           காலையும் நீயே  மாலையும்  நீயே
                           உன்  பெயரின்  பொருளை  நீ  ஏற்றமுறச் செய்துவிட்டாய்
                           புன்னகை  மாறாமல்  புண்களைப்  பொறுத்திருந்தாய்
                           பாலைவனக்  கானலாய்  எட்டாமல்  சென்றுவிட்டாய்

                           எல்லோர்க்கும்  நல்லவளாய், எளியவளாய்  இருந்துவிட்டாய்
                           சொல்லாலும்  செயலாலும்  நீக்கமற  நிறைந்திருந்தாய்
                           பொல்லாத  காலன்  உனை  சொல்லாமல்  கொண்டு சென்றான்
                           இல்லாதவள்  ஆகிவிட்டாய்  இழந்தவர்  அழுகின்றோம்

                           அறிந்தவர்  தெரிந்தவர்  அனைவர்க்கும்  உதவிவந்தாய்
                           பிரிந்து  சென்றுவிட்டாய், இன்றெமை  மறந்துவிட்டாய்
                           இசையால்  இணைந்திருந்தோம்  இனிதாகக்  கலந்திருந்தோம்
                           ஓசையின்றி  ஓடிவிட்டாய்  விடைபெறாது  விரைந்து விட்டாய்

                           திங்கள் ஒன்றும்  தினம் பத்தும் கடந்துசெலும்  முன்புவரை
                           எங்களுடன்  நீ  இருந்தாய்  என்னுடனே  அமர்ந்திருந்தாய்
                           அளவளாவி  மகிழ்ந்திருந்தோம்  பாரதியை  ரசித்திருந்தோம்
                           உளம்மகிழ்ந்து  மனை வந்தேன்  விரைவில் உனை  இழந்துவிட்டேன்

                           என் நோவை, என் துயரை  எப்போதும்  சொல்லிவந்தேன்
                           உன்  நோவை  அறியாமல்  இலக்கியம்  பேசவந்தேன்
                           எத்தனை  உதவிகள்  எனக்கு  நீ  செய்துவிட்டாய்
                           அத்தனைக்கும்  கைம்மாறு  என்று  உஷா  நான் செய்வேன்

                       
                          

வெள்ளி, 9 டிசம்பர், 2016

குயிலி,மஹாகவியின் காதலி

                                            

               காக்கை  குருவி  எங்கள் ஜாதி  என்றுபாடிய  பாரதி  ஒருகுயிலிடம்  காதல்வயப்பட்டுத்

தவித்ததை  எத்தனைபேர் அறிவர்? பாரதியின்  இலக்கிய நயமும்  காதல் சுவையும்  செறிந்த

குயில் பாட்டை  ஆழ்ந்து  படித்தால்   அவரின் காதல்  புரியும்!

                ' பட்டப்பகலில்  வந்த  நெட்டநெடுங்கனவில்  கன்னிக்குயிலொன்று  காவிடத்தே'

பாடியதாம்! அந்த இன்னிசைப்  பாட்டினிலே  மயங்கிய  நம் கவி  'மனிதவுரு  நீங்கிக்  குயிலுருவம்

வாராதோ, இனிதிக் குயிற்பேட்டை  என்றும்  பிரியாமல், காதலித்துக்  கூடிக்  களியுடனே

வாழோமோ? நாதக்கனவினிலே  நம்முயிரைப்போக்கோமோ? ' என்று  பல எண்ணினாராம்!

குக்குக்கூவென்று   குயில் பாடிய பாட்டினிலே  எத்தனையோ  பொருள்  தொக்கி  நின்றதாம்!

அத்தனையும்  அவனிக்கு  உரைப்பதற்கே  பாடிவிட்டாராம்  குயில் பாட்டு!

                     தென்புதுவையில்  கடலலைகள்  'வேதப்  பொருள்பாடி' வேகமாய்  வந்து  கரை

தழுவுமாம்! என்னே கவியின்  கற்பனை! அந்த அழகிய நகரின்  மேற்கே  உள்ள  ஒரு

 மாஞ்சோலையில் பேடைக்குயிலொன்று  வான்கிளையில்  அமர்ந்துகொண்டு , 'ஆண்குயில்கள்

மேனி  புளகமுற,' அத்தனைப்  புட்களும்  'காலைக்கடனிற்  கருத்தின்றிக்  கேட்டிருக்க'

மோஹனப்பாட்டொன்று  பாடியதாம். ' காதல் இல்லையேல்  சாதல் ' என்று  துயருடன்  நீண்ட

ஒரு பாடலைப்பாடியதாம். பாடல் முடிந்து அத்தனைப்பறவைகளும்  பறந்து சென்றபின்பு  நம் கவி

அந்தத் தனிமையில்   அதன் பாட்டில்  இழையோடிய  சோகத்தின்  காரணம்  யாதென்று

கேட்டாராம். அந்த  கானக்குயில்  தன்னைப் பற்றிப்  பலவும்  கூறி, அருவியோசையிலும் ,

கடலோசையிலும், மானிடரின்  தினசரி  செயல்களில்  வெளிப்படும்  ஒவ்வொரு  ஓசையிலும்

இசையை  உணர்ந்து  மனதைப்  பறிகொடுத்ததையும், தேவர்  கருணையினால்  யாவர்  மொழியும்

எளிதுணரும்  பேறு பெற்றதையும், மற்றும்  மானுடர்  நெஞ்சவழக்கெல்லாம்

தனக்குத்தெரிந்திருப்பதாகவும்  கூறிற்றாம். இந்தத்  தருணத்தில்  மற்ற எல்லப்பறவைகளும்

வந்துவிட, தனியே அளவளாவ முடியாமல்  போனது குறித்து வருந்தி 'என்மனதைப்

பறிகொண்டுசெல்கிறீர், நான்கு நாள் கழித்து வாரும், வராமல்போனால் ஆவி  தரியேன் ' என்று

துயருடன்  விடை கொடுத்து மறைந்துவிட்டதாம்.

                        ஒருநாள்  சென்று  மறுநாள்  கரைகடந்த  வேட்கையுடன்  பாரதி  அந்த

 மாஞ்சோலைக்குச்  சென்றாராம்  குயிலைக்காண விழைந்து. ஆனால்  அந்தோ, அன்று  அந்தக்

குயில்  ஒரு குரங்குடன் 'மானிடர் உம்மைத்  தமக்குத் தலைவரெனக் கொண்டாலும்

 மேனியழகிலும் மற்றெல்லா நேர்த்தியிலும், குதிக்கும் அழகிலும், ஈடுஇணையற்ற  திருவாலின்

அழகிலும் உமக்கு  நிகர் ஆவாரோ' என்று  புகழ்ந்து  'உம்  காதல் பெறும்  சீர்த்தி பெற்றேன்' என்று

வானரப்பேச்சிலேயே  பேசியதாம். யாதோ ஒரு  திறத்தால்  அதை பாரதி அறிந்து கொண்டு

 விட்டாராம்! நேற்று  தம்மிடம்  பாடியது போல்  'காதல் இல்லையேல்  சாதல் ' என்று  'ஆசை

ததும்பி  அமுதூறப்' பாடியதாம். இந்தக் காதல் பாட்டைக்  கேட்டு  அந்த ' வற்றற்குறங்கும்'

கள்வெறி கொண்டது போல்  'தாளங்கள்  போடுவதும், தாவிக் குதிப்பதுவும்  பல சேட்டைகள்

செய்து ' அரும்பொருளே , தெய்வமே  உன்னை முத்தமிட்டுக்   களியுறுவேன் ' என்று பல பேசி

'நின்னைப் பிரிவதாற்றுகிலேன்' என்றதாம். இதையெல்லாம்  கேட்டு  உள்ளம்  புண்பட்ட பாரதி

தன் கைவாளை  அதன் மேல்  வீசவும்  தாவி  ஒளிந்ததாம் ; மாயக்குயிலும்  மறைந்ததாம்.

குட்டிப்பிசாசுக் குயிலை எத்தனைத் தேடியும் காணவில்லையாம்.

                                     அடுத்த நாள்  காலை  சோலை வந்த பாரதி   அந்த நீலக்குயில் மோட்டுக்

கிளையில் அமர்ந்து நீண்ட கதை  சொல்லவும்  கிழக்காளை  மாடு ஒன்று  அதனை  ஆவலுடன்

கேட்டதையும் கண்டு  மனம் வெதும்பி  கைவாளை  வீச நினைத்தாராம். ஆனால் அந்தப்

பொய்ப்பறவைப்  பேச்சைக் கேட்டபின்  கொல்ல சூழ்ச்சி  செய்தாராம் ! அந்தக்காளையின்  நீள

 முகத்தையும், நிமிர்ந்திருக்கும்  கொம்புகளையும், பஞ்சுப்பொதிபோல்  படர்ந்த உருவத்தையும்,

  வீரத்திருவாலையும், இடிபோல 'மா' என்ற அதன் உறுமலையும்  மெச்சி," உன் மேல் மோகம்

 கொண்டுவிட்டேன்; உம்  முதுகில்  படுத்து, காதில்  மதுர இசை பாடி, உம்  வாலில்  அடி பட்டு

மகிழ்வேன்" என்று  காதல் மொழி பேசி  "காதலுற்று  வாடுகிறேன் , காதல் போயின் சாதல் " என்று

தன் பொய்ப் பாட்டைப்  பாடவும்  நம் கவி  அந்த தெய்வீகப் பாட்டினின்று  மீண்டு அறிவெய்தித்

தன் கைவாளை வீசினாராம். அது தன் மேல் படும் முன்பு  காளை ஓடிவிட, குயிலும் மறைந்து விட

"நாணமிலாக் காதல்  கொண்ட  நானும்  சிறு குயிலை  வீணிலே தேடியபின்  வீடு  வந்து

சேர்ந்தேன்"என்கிறார்.

                                          கானக்குயில்  பாரதியிடம்  காதல்  கதை உரைத்து அவர்

நெஞ்சைக்கரைத்துத்  தன்மேல்  பித்துப்பிடிக்க வைத்ததையும், கதையின் நடுவே  இடையூறாக

அத்தனைப்  புட்களும்  வந்ததையும், இன்னொரு நாள்  ஆண் குரங்கும், மற்றொரு  நாள்  கிழக்

காளையும்  வந்து  தனக்கு  எதிரிகளாக  ஆனதையும், இத்தனைக்கு நடுவில்  தான் குயிலின்மேல்

பைத்தியமாய்க்  காதல்  கொண்டதையும்  நினைத்து நினைத்து  எதுவும் விளங்காமல்

 கண்ணிரண்டும்  மூடக்  கடும் துயிலில்  ஆழ்ந்து விட்டாராம்.


                                               குயில் சொன்ன  நான்காம்  நாளும் வந்தது.பாரதி வீட்டு மாடமிசை

நின்றிருந்த போது காட்டுத்  திசையில் ஒரு கரும்பறவை தெரியக்கண்டு  குயிலை நினைத்து

வீதிக்கு வந்து  கரும் புள்ளியாய்க் கண்ட அவ்வுருவத்தைத்  தொடர்ந்து  செல்லவும், இவர் நின்றால்

  தான் நிற்பதுவும், சென்றால் தான் செல்வதுமாக  அது  இவருக்கு  வழி காட்டிக் கொண்டு அந்த

மாஞ்சோலைக்கு  சென்று மறைந்ததாம்.அங்கு ஒரு மரக்கிளையில் அமர்ந்து 'தன் பொய்க்காதல்

பழம்பாட்டை' அது பாடவும் அதன் மேல் சினம் கொண்டு  மனம் குமைந்து " குரங்கினையும் ,

காளையையும்  நினைத்து  நீ பாடும்  இந்த இழிவான பாட்டைக் கேட்க  என்னை  எதற்கு  இங்கு

நடத்தி வந்தாய் " என்றாராம் இவர். அதனைக் கொன்றுவிட  நினைத்துப் பின் மனம் இளகி  விட்டு

விட,  அந்தக்குயில்  கண்ணிலே நீர்பெருக, தன் மேல் பிழை ஏதும் இல்லை  என்று சொல்லித் தன்

பூர்வ ஜன்மக்கதையைக் கூறிற்றாம்.


                                              முன்பொருநாள் இந்த மாயக்குயில்  பொதிகைமலைக்கருகில் ஒரு

சோலைதனில் ஒரு மரக்கிளையில்  ஏதேதோ  எண்ணி அமர்ந்திருக்கையில்  ஒரு முனிவர் அங்கு

வர, அவர் காலில்  விழுந்து வணங்கி  தான் கீழ்ப் பறவை ஜாதியில்  பிறந்து, மற்ற

ஜாதிக்குயில்கள்போல் இல்லாமல்  வேறுபட்டு இருப்பதுவும், எல்லோர்  மொழியும்  தனக்கு

விளங்குவதும் , மானுடர் போல்  மனநிலை  வாய்த்திருப்பதுவும்  ஏன்  என்று கேட்க  அந்த முனி

 அதன் முன்ஜன்மக் கதையைக்  கூறினாராம். இக்குயில்  முற்பிறப்பில்  சேர நாட்டின் தெற்கே  ஓர்

மலையில்  வீரமுருகனென்ற வேடர் குலத்தலைவனுக்கு  மகளாகப் பிறந்தாளாம்.சின்னக்குயிலி

என்று  இவளுக்குப் பெயராம். மிக அழகு  பொருந்திய  அவளை  மாடன் எனும் பெயர்  கொண்ட

மாமன் மகன் ஒருவன் காமம் மிகக்கொண்டு பரிசுகள் பலவும் கொடுத்து  மணக்க விரும்பினானாம்.

அவனுடைய  வற்புறுத்தலினால்  அவனுக்கே மாலை இட இவள் சம்மதித்தாளாம். இவள் அழகு

பற்றித் தெரிந்து வேறொரு வேடர் தலைவன்  தன மகன் நெட்டைக் குரங்கனுக்கு  அவளை  மணம்

முடிக்க  விரும்பி  அவள் தந்தையிடம் பேசி பன்னிரண்டு நாட்களிலே  மணம் செய்ய  முடிவு செய்து

விட்டாராம். இதுகேட்டு  மாடன் அவளிடம்வந்து சினம் கொண்டு  பேசியபோது  அவள் அவனிடம்

உள்ள கருணையினால் அவனை ஆறுதல் செய்து  குரங்கனுக்கு  மாலையிட்டாலும் ஏதேனும்

பேதம் செய்து  மூன்றே  மாதங்களில்  திரும்பி வந்துவிடுவதாகவும்  எட்டு மாதங்களில் இவனுக்கு

மனைவியாவதாகவும்  உறுதி செய்தாளாம். இதெல்லாம் அவன் மீது கொண்டகருணையினாலாம்

காதலினால் இல்லையாம்.

                                        சில தினங்கள் சென்ற பின்பு குயிலியும்  தோழியரும்  கானகத்தே

களித்தாடும்  சமயத்தில்  வேட்டைக்கென  வந்த சேர இளவரசன்  குயிலியைக்கண்டு மையல் மிகக்

கொண்டு இவளை அடைய  வேண்டும் என்று  முடிவு செய்தானாம்.மன்னன் மகனைக்கண்டு

தோழியர் அஞ்சி விலகிச்சென்று விட்டனராம்.இவன் குயிலியிடம் காதல்  மிகவே கொண்டு

 "உன்னைப் பிரிதலறியேன் என்றானாம். மனதில் பெருகிய காதலை அடக்கி,அவன் மாளிகையில்

கல்வியிலும், கலைகளிலும்,அழகிலும் சிறந்த எத்தனையோ பெண்கள் இருக்க  குறமகளான

தன்னை அவன் நாடவேண்டாம் என்றும், மற்றும் மன்னர் பலர் தங்கள் பெண்களை  அவனுக்கு

மணம் முடிக்க  வருவாராதலினால் தன்னை விட்டு விலகுதல் வேண்டும் என்றும்  கூறி  அவள்

கலக்கமெய்தி  நிற்கையிலே, பக்கத்தில் வந்து முத்தமிட்டு  அவளைத்தழுவி  "இனி உன்னைப்

பிரியேன், நீயே என் மனைவி , என் ராணி , நின் இல்லம் வந்து பெண் கேட்டு நின்னை  வேத நெறி

தவறாது  மணம்  முடிப்பேன்" என்றானாம். இதைக்கேட்டுக் குயிலி மனம் மகிழ்ந்து , நாணம்

தவிர்த்து நனவும் தவிர்ந்து  அவனைக் கட்டியணைத்து, இன்பக்கனவில   இருவரும்

மூழ்கியிருக்கையிலே, ஊரிலிருந்து  வந்த நெட்டைக்குரங்கன்   அவள்  தோழிகளோடு  காட்டில்

விளையாட  வந்தது கேட்டு  அங்கு வர, இவர்கள்  இருக்கும் நிலை கண்டு  சினமுற்று, "சிறுக்கி

தீது செய்துவிட்டாள், என் மானத்தைத்  தொலைத்து  விட்டாள் " என்று  கலங்கினானாம்.

மாப்பிள்ளை ஊரிலிருந்து வந்ததையும்  இவள்  சென்ற தோப்பிற்கு  ஏகியதையும்  யாரோ

மாடனுக்குக்  கூறி விட , அவனும்  கானகத்துக்கு விரைந்தானாம். கனல் கக்கும்  விழிகளுடன்

இவன் நிற்பதை  மன்னன் மகன் பார்க்கவில்லையாம் ; நெட்டைக்  குரங்கன் நிற்பதை  இவன்

பார்க்கவில்லையாம். குயிலியும் அவள்காதலனும்  இன்பசுகத்தில்  மூழ்கியிருக்க, மாடனும்

குரங்கனும் சினத்துடன்  வாளுருவி  மன்னவன் மீது வீச  வெட்டிரண்டு விழுந்தனவாம்  மன்னவன்

முதுகில் ; சட்டென்று  மன்னவனும் திரும்பி  வீச்சிரண்டில்  அவ்விருவரையும்  வீழ்த்தினானாம் .

இருவரும்  பிணமாகி விட , மன்னவன் சோர்வெய்தி  மண்மேல் வீழவும் , குயிலி அவனை  வாரி

எடுத்து மடியில் வைத்துப் புலம்பவும், "இனி  நான் பிழைக்கமாட்டேன்  ஆனால் அடுத்த பிறவியில்

உன்னுடன் இன்பமாக வாழ்வேன்"  என்ற  அரச குமாரன், கண்கள்  மூடி புன்னகைத்தபடி  மரித்து

விட்டானாம்.

                                                     அந்த  முனி  மேலும்  சொன்னாராம் ;  உயிர் நீத்த அரசகுமாரன்

இப்போது  தொண்டை நாட்டின் கடற்சார்ந்த ஒரு ஊரில் மானிடனாகத்  தோன்றி  வளர்ந்து

இக்கானகத்தே வந்து இவள் பாட்டைக்   கேட்டு மயங்கி மறுபடியும்  இவள் மேல் காதல்

கொள்வானாம். கர்மவசத்தினால் குயிலி மற்றும் ஒரு வேடனுக்கு மகளாகப்  பிறக்கவும்,

வன்பேயாய்க்  காடு  மலையெல்லாம்  சுற்றி வரும்  மாடன், குரங்கன் இருவரும் இதனைக்

கண்டு கொண்டு  காழ்ப்புணர்ச்சியால்  இவளைக்  குயிலாக்கி, மறுபடியும்  மானிடனாகப்  பிறந்த

மன்னன் இவளைத்  தேடி வரும் போது மாயச் செய்கை  பலவும் செய்து  அவனை  'இவள் வஞ்சகி'

என்று இவள் மீது  ஐயம் கொள்ளச் செய்து  இவளை விட்டு விடும்படி செய்து விடுவார்களாம். "பின்

நடப்பதை  நீ கண்டு கொள்வாய் " என்று சொல்லி சந்தி  பூஜை செய்யச் சென்று விட்டாராம்.

                                             
                                                    இத்தனையும்  பாரதியிடம்  சொன்ன குயில் "பொய்  ஏதும்

இன்றி முனிவர் கூறியதனைத்தையும் அப்படியே சொல்லிவிட்டேன் ; காதலருள் புரிவீர்,

இல்லையேல் தமது கையால் எனைக்கொன்று சாதலருள்வீர் "  என்றவண்ணம்  அவர்

  கையில்  வீழ்ந்ததாம்.அன்புடன்  அருங்குயிலை இன்பவெறியுடன்  கவி முத்தமிடவும் கோகிலம்

மறைந்து மின்கொடி போல் தோன்றிய பெண்ணொருத்தி அங்கு நிற்கவும், பெருங்களிப்பெய்திய

இவர் அந்த அற்புதத்தை சொல்லில் வடிக்கவொணாது  என்று சொல்லி , சொல்லிவிட்டார்  ஒரு

காவியமாய்! இந்தப்பாவையுடனேயே  சோலைக்குள்  சென்று மறைந்தாராம்,

                                                  ஓஹோ! எனக் கதறி  கண் விழித்துப்  பார்த்து, இத்தனையும் மாலை

மயக்கத்தில்  வந்த" கற்பனையின் சூழ்ச்சியென்றே  கண்டுகொண்டேன் " என்று  சொல்லி  ஒரு

விருந்தையே  நமக்குப் படைத்துவிட்டார்!

                                      இடி முழக்கத்துடன் சுதந்திரப்  பாடல்களால் மக்களைத் தட்டியெழுப்பிய

இந்த மீசைக்காரக் கவியின் மனதுள் இருந்த காதல்  எனும்  உணர்வை அறிந்து, மனம்  நெகிழ்ந்து

"யான் பெற்ற இன்பம்  பெறுக  இவ்வையம் " என  எண்ணி  இக்கட்டுரையைப் புனைந்துவிட்டேன்.


                                    கலைமகளின் பெயரைப்பெற்று , கலையுடனே  வாழ்ந்து, களிறு  ஒன்றால்

சாக்காட்டினை சந்தித்த  மஹாகவியின் பிறந்ததின  காணிக்கையாக இதனை  சமர்ப்பிக்கிறேன் .

படித்துவிட்டு  தங்கள் மேலான கருத்துக்களைத்  தெரிவிக்குமாறு  கேட்டுக் கொள்கிறேன் .

( ஆங்கிலத்திலும் இருக்கலாம் )

                                         இந்த முயற்சியில்  எனக்கு உறுதுணையாய் இருந்து, ஊக்கமளித்து  தன்

கருத்துக்களையும்  நல்கி உதவி புரிந்த  உற்ற தோழி உஷாவுக்கு  என்  மனமார்ந்த  நன்றி.                   

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

அறியாமையின் அறைகூவல்

                                  
             1.  தெய்வமே  அமைதிகொடு  உன்னிடம்  கெஞ்சுகிறேன்
                  செய்வதறியாது   சோர்வுற்றுச் சலித்துவிட்டேன்
                  உய்வது எங்ஙனம் என்பதை யான் அறியேன்
                  பெய்வாய் உன் அருளை நம்புகிறேன் நான் சிறியேன்

              2. இன்பதுன்பம் இரண்டையும்  சமமாகவே  நினை
                  என்பதனை  நீ சொன்னாய் அறிவேன்-ஆதலின்
                  இன்னல்கள்  மேன்மேலும் வந்தெனைத் தாக்கினால்
                   உன்னையே  நினைத்திருப்பேன் என்று நீ நினைத்தாயோ

              3.  நான் எனது  என்பதின்னும்  நீங்கவில்லை
                   என்கணவன் என்மக்கள் என்ற எண்ணம் போகவில்லை
                   உணர்வுகளை உணர்ச்சிகளை எமக்கிங்கு ஏன் கொடுத்தாய்
                   திணறுகிறோம்  அவை எமையே உணவாகக்  கேட்பதனால்

               4. உன் நிழல் உன்னுடன்  என்று என் அன்னை சொன்னார்
                   முன்வினை தொடரும் என்று சொன்னார் வள்ளுவனார்
                   எத்தனைதான் கற்றிருந்தும் நல்லவை பல கேட்டிருந்தும்
                   அத்தனைக்கும் மனம் ஏன் பக்குவம் பெறவில்லை
   
                5. அப்போதைக்கப்போதே  சொல்லிவை என்றிட்டார்
                    எப்போதும் உன்னிடம் இடர்கள் சொல்லி அழுகின்றேன்
                    இத்தருணம்  தெளிந்திட்டேன்  உன் பரிவை  உள்ளுணர்ந்தேன்
                     ஒத்தபடி  வாழ்ந்திடுவேன் உன் நாமம் நாவில்விடுவேன்

சனி, 24 செப்டம்பர், 2016

மஹாகவி பாரதிக்கு என் மனமார்ந்த அஞ்சலி

   
1. பாரதனில்  பெருமை  பெற்ற  பாரதந்தன்னில்
            
    பாரதியென்றோர்   பாவலன்   பிறந்திட்டான்

    பா  ரதத்திலேறி  பல்புகழ்  பெற்றிட்டான்

    பாரதத்தாய்  பரிதவிக்கப்  பரமனடி சேர்ந்திட்டான்


 2. 'பாட்டுக்கொரு புலவன்  பாரதி ' யென  பெயர்  பெற்றான்

     நாட்டோர்  நலனையே  நினைவினில்  கொண்டிருந்தான்

     சாட்டையடிஎனவே  சந்தமழை  பொழிந்தான்

      நாட்டினான்  நமதுரிமைதனை பாங்குறவே  பாட்டினிலே

   
 3. கண்ணனிடம்  காதல் மிகக்கொண்டு மனம்  களித்திருந்தான்

     கண்ணன்  அங்கவனுக்கு  யாவதுமாய்  நின்றிருந்தான்

     கண்ணெனவே  காத்தான் தாய்மொழிதனையும்  நாட்டினையும்

     கண்ணுக்குக்கண்ணான கவிஞனவன் இன்றிலையே

                 
4. பாப்பா பாட்டும்  குயில்பாட்டும்  பாஞ்சாலி சபதமும்

    காப்பாற்றும்  காளியின்மேல்  கவிதையும்  செய்திட்டான்

    கூப்பாடு  போட்டு  சாதி வேற்றுமையை  குழிபுதைத்தான்

    பாப்பாவும்  அவன் பெருமையினை  பள்ளியில்  பயின்றிடுமே


5. விடுதலை  விடுதலையெனவே  வீரமுழக்கம்  செய்திட்டான்

     சடுதியில்  சந்தித்தான்  சாக்காட்டினை  அவனும்

     கெடுதி  செய்தனரே  கடவுளரும்  கண்ணிலையோ

     விடுதலையினை  அவன்  விண்ணின்று  கண்டானோ

           
6. பார்த்திருந்தேன்  பாரதியை  ஞானி  அவனென  பாட்டிசொன்னர்

    சீர்திருத்தவாதியதனால்  சிந்தைதனில்  இடம் கொண்டான்

    ஏர்த்தொழிலும்  போர்த்தொழிலும்  ஏற்றமுற்றன  அவன் பாட்டில்

    பேர்பெற்ற  தமிழர்  யாம்  அவன் பெருமை  பேசுவமே

  
                
                 

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

வண்ண வில் ஒன்று கண்டேன் வானிலே

பிற்பகல்  பொழுதொன்றில்  விண்ணில்  ஒரு  விந்தை கண்டேன்!
   
பகலவன்  மேல்  மோகம்  கொண்டு முகில்கள் வந்தன  மழை  பொழிந்தன 
    
சூரியக்கதிர்  ஒருபுறம்  மாரியின்  சதிர்  மறுபுறம்!
    
கண்ணுக்கினியதாய்  வண்ணமயமானதாய்  நிகழ்ந்தது  ஒரு விழா  ஆங்கே 
   
கானக்குயிலும்  மோனமயிலும்  மயங்கும்  ஒரு வண்ண வில்  வானில்  விளைந்தது!
   
விளையாட்டாய் வந்து  விரைவில் மறைந்தாலும்  உள்ளம் கொள்ளைபோனது 
                                                                                                 தெள்ளத்தெளிவானது!
   
ஏழு  நிறங்களும்  ஏழு ஸ்வரங்களாய்  நெஞ்சை  நிறைக்க  எழுதிவைத்தேன் 
                                                                                                       இதை ஏழு வரிகளில்!
      

ஞாயிறு, 17 ஜூலை, 2016

இறைவனால் இயற்கை -இயற்கையில் இறைவன்

1.இயற்கை உண்டு இறைவன் இல்லை என்கிறார் இங்கு சிலர்
   இறைவனால் இயற்கையும் இயற்கையில் இறைவனும் என்றவர் அறிந்திலர்
   இயற்கையெனும் விருந்தினை யார் சமைத்தார் தரணியிலே
   இறைவனும் இறைவியும் சேர்ந்து செய்த விந்தை இது

2. நான் எனது என்கிறார் இங்கு இவர்
   தான் யார் என்பது ஏனோ அறிந்திலர்
   மூலத்தின் கூறாய் தாம் வந்தது தெரியவில்லை
   காலம் வேறாய்  ஆனபின் உணர்வாரோ

3.  கருவினை உருவாக்கி  உயிர் கொடுப்பேன் என்கிறார்
     செருக்கினால் பேசுகிறார்  பெருமை மிகவே  கொள்கிறார்
     தனக்கும் மேல் இருப்பவனை அறியவில்லை
     மனக்குறை நீக்கும் மூலப் பொருள்  தெரியவில்லை

4.  கருவினின்று  உருவா  உருவினின்று கருவா
     விதையினின்று  செடியா  செடியினின்று  விதையா
     எதைக் கொண்டு எதைப் பெற்றோம் என்பது யார் அறிவார்
     கருவுக்கு விந்துவும் தருவுக்கு விதையும் யார் இங்கு கொண்டு தந்தார்

5.   வினா உண்டு  விடை இல்லை  என்ன இது  விசித்திரம்!
      அனாதி காலமாய்  தொடர்ந்து  வரும்  சரித்திரம் !
      கனாக் கண்டது போல்  பிறப்பதுவும்  இறப்பதுவும்
      வினோதமாய்  மாறி  மாறி  சுற்றும் ஒரு சக்கரம்

6.   விஞ்ஞானம்  கற்றுணர்ந்து   மெய்ஞ்ஞானம் புரிந்துணர்ந்து
      அஞ்ஞான இருள் நீக்கி  இறைஞானம்  உய்த்துணர்ந்து
      பொய்யானவற்றை  விட்டொழித்து  விழித்துணர்ந்து
      மெய்யாக  வாழ்ந்திடுவோம் மெய்ப்பொருளைக் கண்டறிவோம்





புதன், 16 மார்ச், 2016

பஞ்ச பூதங்கள்

ஐம்பூதங்களின்  ஆற்றலை  அழகுறச்  சொல்லுவோம்
ஐம்புலன்களால்  அவற்றை  நம்முள்  உணருவோம்
ஐயம்  எமக்கில்லை எம் தெய்வம் அவையே
ஐக்கியப்பட்டு  நின்று அவற்றைப்  பேணுவோம்

ஆகாசம் :

அண்ட சராசரங்களையும்  நின்   ஆளுகைக்குட்படுத்தி
பிரம்மாண்டமாய்ப்  பரவிய பிரபஞ்சக்  களமே
விண்ணே, வெட்டவெளியே,ஆகாசமே
ஆதியாய்  அனாதியாய்  பரம்பொருளாய்ப்
பேரியக்க  மண்டலமாய்  எங்கும்  பரவிய  மெய்ப்பொருளே
எம்முள்ளும்  சூழ்ந்து நிற்கும் உனை   வணங்கி  காப்புப் பெறுவோம்

காற்று :
புவிக்கொரு  கவசமாய்  எமைச் சுற்றி  இயங்கும் காற்றுவெளியே
மெய்க்குள் சுவாசமாய் எமை இயக்கும்  உயிர்க்காற்றே
நாதத்துள்  நரம்பாய் பிராணிகளுள் நாடியாய் நன்மை செயும் நல்லவனே
அசைவுக்கு ஆதாரமாய்  ஓசைக்கு  உணர்வாய்
இசைக்கு  உயிர் கொடுத்து  இன்றெனைப்  பாடவைத்து
பலகோடி நலன் நல்கும்  வாயுதேவனே  வாழவைப்பாய்  எமை இன்று

நெருப்பு:
தீயே! தீயதைப்  பொசுக்குவதும்  தின்பதை சமைப்பதும் நீயே
உலகை இயக்கும் வெப்பமாய் ,உயிரினங்களை உலவச்செய்து
உடலினுள்ளே ஊடுருவி  உயிர் சக்திக்கு உரமளிப்பாய்
காலமெலாம்  கடமை ஆற்றும் கர்மயோகியே
உன்னுதவி இன்றி  உயிரினங்கள் குளிர்ந்து விட்டால் உய்வதேது?
கருத்துடன்  உன்னுயர்வு  உணர்ந்து  ஊக்கமும்  ஆக்கமும்  பெற்று வாழ்வோம்

நீர் :
உலக உருண்டையை சூழ்ந்துள்ள கடலே, நீரே
சிற்றாறாய் ,பொய்கையாய் , நீர்வீழ்ச்சியாய் ,மஹாநதியாய் ,
மாக்கடலாய்,நீராவியாய் ,மேகத்தினின்று மழையாய்
மண்ணுலகம் வந்தடைந்து  வையகத்தை  வாழவைக்கும்
வள்ளலே! உளம்குளிர  உனை  வாழ்த்துவோம்
வாழ்வில்  மேன்மையுற்று, மேம்படுத்துவோம்  உனையும்

நிலம் :

நீரினால் சூழப்பட்ட  நிலமடந்தை  மண்ணகமே
புவியே,பூமித்தாயே ,பொறுமையின் சிகரமே
அகழ்வாரையும் ,இகழ்வாரையும் தாங்கும் தரணியே !
ஐம்பூதங்களின்  பரிணாம எழுச்சிதனில்
ஐந்தாம் நிலையில் அமைந்த நிலமே
நின்னைப்  பாதுகாத்துப் போற்றிப் பயன் பெறுவோம்


நிலமடந்தையும் , நீரும், நெருப்பும், நானிலம் சூழ் காற்றும் ,
நீள்  விசும்பும்  நிச்சலும் நன்மை பயக்க
நாம் இவற்றின் ஆற்றலை  ஆக்க பூர்வமாக்குவோம்
இவை ஐந்தும்  நம்முள்ளே ஒன்றினுள் ஒன்றாய்  இயங்கும் திறன் உணர்வோம்
இவற்றோடு  இயைந்து  வாழ்வினை மேம்படுத்தி
இயற்கையின்  மேன்மையைப்  போற்றி வாழுவோம்

திங்கள், 22 பிப்ரவரி, 2016

அழகனுக்கு ஒரு 'ழ 'கர மாலை

மனம் குழைய அழைத்தால் நீ குழந்தையாய் வருவாயா ?
தமிழில் பாடி உனை அழைத்தால் தவழ்ந்திங்கு வருவாயா?
தளர்நடை நடந்துவந்தென்  மடியினில் அமர்ந்து கொண்டு
மழலையில் மிழற்றும் உனை தழுவிமனம் மகிழ்வேனோ?

ஈரேழு உலகமதை உன்கருவில் உருவாக்கி  ஓயாது ஒழியாது காக்கும் உன் புகழ்பாடி
பெரியோனாய் உனை எட்டத்தில் வைத்து விட்டால்
எளியவனாய் சிறுவனாய் என்னருகில் வருவாயா?
எழில்பொங்க குழலூதி மனம் கொள்ளை கொள்வாயா?

ஆழ்மனக் காதலுடன் ஆழிமழைக் கண்ணனை
குழவி ஆக்கிக் களிப்பெய்தி பண்ணிசைத்துப் பாராட்டி
நீராட்டி  அமுதூட்டி  தாலாட்டிப் பரிவு செய்த
பெரியாழ்வார் பெற்ற இன்பம்  சிறியேன் நான் அடைவேனோ?