புதன், 26 ஆகஸ்ட், 2020

வைரஸ் எனும் வைரி

                                   1.கரோனா  எனும்  பெயர்  கொண்ட  வைரி இங்கு 

                                     நரனுக்குக்    கொடுத்துவரும்   இடர்களை  நீக்கிவிட 

                                     நாரணன் வருவானா  சுதர்சனனுடனே   அல்லது 

                                     ஹரன்வந்து  நிற்பானா சூலமதை   கையில்  கொண்டு  


                                   2. ராமன்  வருவானா  வில்லும்  அம்பும்  ஏந்தி

                                      ராவணனை  அழித்தது போல்  வைரியை  அழிப்பானா 

                                      கரோனாவை  ஓடவிட்டு   உலகைவிட்டொழித்துவிட்டு 

                                       கரம்கொடுத்து  காத்துநின்று  உய்வித்துச் செல்வானா 


                                   3. சிரஞ்ஜீவி  அனுமன்  இங்கு  சீக்கிரமே  வருவானா 

                                       சஞ்ஜீவினி  கொண்டுவந்து  சங்கடம்  தீர்ப்பானா 

                                      மிஞ்சிவரும்  வைரியை வையம் விட்டு  ஒழிப்பானா 

                                      அஞ்சேலென்று  சொல்லிவந்து  தஞ்சம்  அளிப்பானா 


                                   4. ஐங்கரன்  வருவானா  இங்கெமை  காப்பானா 

                                       சங்கரன் மகன் இவன்  ஆனையாகவே  வந்து 

                                       எங்கெங்கும்  பரவிவரும்  வைரிதனை  மிதித்தழித்து 

                                       சங்கடங்கள்  தீர்த்துவைத்து  மங்கலங்கள்  கொடுப்பானா 


                                     5.கந்தசாமி  வருவானா  கைவேலுடன்   வருவானா 

                                        இந்த  மானுடம்  படும்  துயரை  துரிதமாய்  தீர்ப்பானா 

                                        வந்திருக்கும்  வைரியை  வேலெறிந்து  வெல்வானா 

                                         சொந்தங்கள்  காப்பானா  துணையாய்  இங்கிருப்பானா 


                                      6. யாதுமாகி  நின்ற  காளி  இங்குவந்து  நின்றுகொண்டு 

                                          தீது செய்யும்   வைரிதனை  நிராயுதபாணியாக்கி 

                                          ஏதும் இல்லதாகி ஓடும் விந்தைதனை  செய்வாளா 

                                           மாது அவள் நம் அன்னை  நமைகாக்க  வருவாளா 


                                      7. இறைசக்தி  பல உருவில்  வந்திருந்து சென்றதுண்டு 

                                          விரைந்து இன்று அனைத்துருவும்  ஓர் உருவாய் வந்திடுமோ 

                                           மறைந்திருந்து   வைரியை  மரித்துவிட்டுச் சென்றிடுமோ 

                                           குறையகற்றி  மனித இனம் மகிழ்ச்சியுறச் செய்திடுமோ

செவ்வாய், 17 மார்ச், 2020

ரோகமே நீ வேகமாகப் போய்விடு

நோய்க்கொரு மருந்தில்லை
ஓய்வெடுக்க நேரமில்லை
போய்க்கொண்டிருக்குது காலம்
தோய்ந்தருக்குது உலகு துயரில்

மருந்தொன்று கண்டோம் பிணி தீர்க்க என்கிறார்
இருந்து வாழ்ந்திடவே வழியொன்றும் சொல்கிறார்
விருந்தொன்றும் வேண்டாம் இன்றிங்கெங்களுக்கு
திருந்தி மட்டுமே வாழ்ந்திருந்தால் வரும்சுகம் என்றிடுவேன்

எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் தெரியவில்லை
இங்கே எதுவுமே நன்றாகவே இல்லை
அங்கே இங்கே என்று எங்கேயும் ரோகமென்றால்
எங்கே செல்வது அடைக்கலம் யார் தருவர்?

மோகத்தை எல்லாம் விட்டொழித்து வாழ்ந்திருந்து
போகத்தையெல்லாம் இங்கு சற்றேனும் மறந்திருந்து
யோகாசனம் பயின்று தியானத்தில் அமர்ந்திருந்தால்
வேகமாக வரும் இறை வினை தீர்ப்பர் உண்மை அன்றோ

-The painful thought of the Coronavirus pandemic led to this outburst last night.

புதன், 11 மார்ச், 2020

வருவாய் அருள்வாய் இறைவா

                        
              1. பெரியவனாய் மிகமிகப் பெரியவனாய்  வளர்ந்து நின்றாய்
             
                 அரிய பெரிய  தத்துவத்தைப்  போர்க்களத்தில் பேசிநின்றாய்

                 உரியதொரு  தருணமதில்  உண்மைகளை உரைத்துநின்றாய்

                 சிரித்தபடி  பார்த்தனுக்கு  சீரியவை சொல்லிநின்றாய்


              2. கள்ளத்தனம்செய்து  கயிற்றினால் கட்டுண்டாய்

                  பிள்ளைகளுடன்கூடி  களவாடி களி கொண்டாய்

                 அள்ளிஅள்ளி வெண்ணையுண்டு அன்னையிடம் சிக்குண்டாய்

                 வெள்ளை மனத்தவனாய்  உள்ளமதை கொள்ளை கொண்டாய்


              3.சின்னவனாய் இருக்கையிலே  பெரியவையாய்  பலசெய்தாய்

                 அன்னையென்று  வந்தவளை உயிர்குடித்து அழியவிட்டாய்

                 பின்னை ஒருநாளில் பகைகெடுக்கப்பரிந்துவந்தாய்

                 என்னே உன்லீலைகள்  என்றெனை பாடவைத்தாய்


             4.உணர்வுகளும்  உணர்ச்சிகளும்  கொடுத்தெமை ஆடவிட்டாய்

                மணம்கமழும் கீதையினை  பார்த்தனுக்கு போதித்தாய்

                பிணங்குகொள்  மனதினை  நிலைப்படுத்த வழிசொன்னாய்

                இணங்கி அதுவந்துவிட்டால்  அறிவேன் நீ எமைக்காப்பாய்

சனி, 7 மார்ச், 2020

நீயேஎன்தாய்


1. அன்னை அடித்தால் அவளையே சென்றணைத்து

   கன்னமொடு கன்னம் வைத்து அழுதிடும் மதலைபோல்

   என்னை நீ சோதனையால் எத்தனைதான் அடித்தாலும்

   உன்பதமே பற்றி கண்ணீரால் கழுவிடுவேன்


2. அழுது அடம் செய்து சாதித்திடும் குழவிபோல்

   விழுந்தெழுந்து தப்பாமல் எப்போதும் உனைவேண்டி

   தொழுது உன்னிடம் துயர்சொல்லி அழுதிடுவேன்

   வழுத்தி உனை இரந்து வேண்டியது பெற்றிடுவேன்


3. விளையாடும் குழந்தை பெற்றவளை நினைப்பதில்லை

   விழுந்து காயமுற்றால் அம்மாவென வருவதுபோல்

   விளையாடும் என்வினை எனைவென்று நகைக்கயில்

   அழுந்தும் வாதனையால் இறைவா உனை சரணடைவேன்


4. உன் நினைவு என்னுள்ளே குருதிபோல் ஓடிடினும்

   என் மனம் மயங்கி சற்றுன்னை மறந்திடினும்

    மன்னித்து நீ எனை ஏற்பாய் நான்அறிவேன்

    என்னுடைய தாய் நீதான் இறையோனே

வியாழன், 16 ஜனவரி, 2020

மஹாபெரியவா


                                  1. அன்று இவ்வுலகம்  அளந்தான்  பெரியவன்

                                     இன்றிங்கு நம்மிடையே  ஒளிர்ந்தார்  பெரியவா

                                     சென்றங்கு இருந்துகொண்டு ஒளிக்காட்டி வழிகாட்டி
                 
                                     என்றென்றும் கருணையுடன் கைபிடித்துச் செல்லட்டும்


                                 2.  காலடிஆசானின் பாதையில் சென்று அவர்

                                      காலடிச் சுவடுகளை ஆதாரமாய்பற்றி

                                      மாலடியைப் பற்றிவிட்டால் குறையொன்றும் இலையென்று

                                      நாலடியில் நவின்று நமை நன்மைபெறச் செய்துவிட்டார்

 
                                  3. சங்கரனும் ஐங்கரனும் ஷண்முகனும் சேர்ந்து
 
                                     சங்கரனாய்  இங்கெமை  உய்விக்க வந்தனரோ

                                     திங்களும் ஆதித்யனும்  எழுந்தாற்போல் வந்து

                                      தங்கமாநகர் காஞ்சியில் சிங்கமாய் அமர்ந்தாரோ


                                 4. அன்று அந்த ஸ்வாமிநாதன் தகப்பனுக்கு குருவானார்

                                     இன்றிந்த ஸ்வாமிநாதன் உலகுக்கே குருவானார்

                                     பாலனாய் காஞ்சிவந்து துறவியாய்  அமர்ந்தாரே

                                     சீலனாய் நமையெல்லாம் வழிநடத்திச் செல்கிறாரே

புதன், 8 ஜனவரி, 2020

கிட்டிடுமோ வெட்டவெளி !?

1. ஆகாசம் என்றால்  வெட்டவெளி  என்கிறார்

    போகாத ஊருக்கு  வழி எங்கே என்றிடாமல்

    யோகாசனம் பயின்று  நிட்டையில் ஆழ்ந்துவிட்டால்

   நோகாமல்  மனம் சென்று  ஆகாயம்  தொடும் என்றார்


2. எட்டிஎட்டிப் பார்க்கிறேன் எட்டவில்லை அது எனக்கு

    கிட்டத்தில் அதுஇல்லை தொட்டுணர முடியவில்லை

    கிட்டமாட்டேன் என்று அது  அங்கேயே இருக்கிறது

    எட்டத்தில் இருந்துகொண்டு  எல்லையற்று விரிகிறது

                    
3. தொட்டிடுவேன் மனதால் ஆகாயத்தை என்று

    திட்டமிட்டு அமர்ந்து  தியானம் செய்ய முயல்கின்றேன்

    கட்டவிழ்ந்து ஓடும்  மனத்தைக் கட்டிவைத்து அமர்ந்திருந்தால்

    இட்டதெய்வமும் குருவும்  இயைந்துவந்து அருள்வாரோ


4. கட்டிவந்த மூட்டையை  விட்டொழிக்க ஏலாது

    கிட்டியுள்ள பிறவியிலும்  மூட்டை கட்டலாகாது

    நாட்டமெலாம் விட்டொழித்து  நல்லதையே நினைத்திருந்தால்

   ஆட்டமெல்லாம் ஓயும் முன்பு  வெட்டவெளியைத் தொடுவேனோ