ஞாயிறு, 10 டிசம்பர், 2017

அகர முதல எழுத்தெலாம் அனுமனே

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு அகரம் முதல் எல்லா எழுத்துக்களிலும் கவிதை செய்து இசையமைத்து பாடுமாறு அனுமன் எனைப்பணித்து அவன்விருப்பத்தை நிறைவேற்றிக்கொண்டான்.இப்போது அனுமத் ஜயந்தியை முன்னிட்டு இந்த வலைத்தளத்தில்

இதனை அளித்துள்ளேன்.

என் மகள் ஸிந்துஜா இதனைப் பாடி அவளுடைய வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறாள்.

அவளுடைய விலாசம் கீழே உள்ளது.

https://octaves.blogspot.com/2014/02/anumane.html

ராகம் :காபி

அனுமனே அஞ்சனை மைந்தனே

அண்ணல் ராமனின் ஆருயிர் அன்பனே

இல்லாளை பிரிந்து இடருற்ற ஈசனை

உடனிருந்து காத்து ஊக்கம் அளித்தனை

எத்தனை இடர்கள் எல்லாம் கடந்தனை

ஏவல்புரிந்து ஏற்றம் பெற்றனை

ஐயன் ராமனுடன் ஐக்கியம் ஆயினை

ஒப்புவமை இல்லா ஓரிடம் சேர்ந்தனை

ஔடதம் பெற நீ சைலம் பெயர்த்தனை

அஃதினை கொணர்ந்து இளவலை காத்தனை


ராகம் :ஹிந்தோளம்

கவினுறு கானகத்தே கிஷ்கிந்தையதனில்

கீர்த்தி பெற்ற கவியரசன் வாலி வதம் அடைய

குரங்கரசன் அவன் தம்பி ஸுக்ரீவ ராஜன் உன்னை

கூவி அழைக்கத் தாவிச்சென்று கடல் கடந்தாய்

கெடுதிக்கு கேடிழைத்து கமலைக்கு கை கொடுத்தாய்

கொக்கரித்து கோபித்து கொட்டம் எல்லாம் முறியடித்தாய்

கௌசிகன் சங்கடம் சடுதியில் தீர்த்தவனை

ஸாமான்யமானவனாய் சாதிக்க வந்தவனை

சிந்தையில் பூட்டிவைத்து சீலத்தில் நீ உயர்ந்தாய்

சிறு பிள்ளை பருவத்தில் சுடும் என்று அறியாது

சூரிய பழம் பிடிக்க சீறிப் பறந்தனை

செல்வமே, சேடனே

சைனியத்துடன் ஈழத்தை வீழ்த்தினையே


ராகம் :மோஹனம்

சொக்கனே சோர்வினை போக்கிடும் சௌந்தர்ய ரூபனே

ஞாலம் போற்றும் ஞானியே

தலைவன் தாள் பணிந்து தின்மைக்குத் தீவைத்தாய்

துன்பம் துடைத்து தூயோனை காத்திட்டாய்

தென்னிலங்கை கோமானை தேசு இழக்கச் செய்தாய்

தையலைக் காத்து தொல்லையையைத் தோற்கச் செய்தாய்

தௌவைதனை நலியவிட்டு நாணியோடச் செய்திடுவாய்

நிலம் நீர் எங்கிலும் நுணுகி நீ நூறுசெய்வாய்

நெக்குருகி நேர்த்திசெய்தால் நைந்துருகி நலம் தருவாய்

நொந்துவந்த உள்ளமதில் நோவினை நீக்கிடுவாய்


ராகம்: திலங்

பரமன் அருகினில் பாங்குடன் நீ இருந்தாய்

பிறன்மனை கவர்ந்தோனை பீழையில் வீழச் செய்தாய்

புந்தியில் சிறந்து நின்றாய் பூவையைக் கண்டு வந்தாய்

பெம்மான் ராமனை பேசுவோரை நீ சென்று

பையவே பாலித்து பொழிவாய் நின்னருளை

போர்க்களத்தில் பௌருஷத்தால் பொலிந்து நீ நின்றாய்

மங்கினார் மாண்டார் மாருதி உனைக்கண்டு

மிகுந்திலர் மீண்டிலர் முன்வினை பயனால்

மூடரவர் மதிகெட்டு மெய்ம்மையை கண்டிலரே

மேன்மை நீ கொண்டாய் மையல் தரும் எழில் கொண்டாய்

மொய்க்கின்றார் மாந்தர் உன் மோஹன ரூபம் கண்டு

மௌனமாய் மறம் காட்டி மன்னவரை மலைக்க வைத்தாய்


ராகம் :ஆஹிர்பைரவ்

யமன் யாண்டும் துணிவு கொளான் சிரஞ்சீவி உனைக்கொள்ள

யுக்தி இலன் யூகித்திலன் யோகி உன்னை எதிர்கொள்ள

யௌவன ராஜன் நீ வஞ்சகரை வகிர்ந்ததெல்லாம்

வான் புகழ் வில் வீரன் வெகுண்டு உன்னை வேண்டியதற்கே

வையம் வந்த தெய்வமதை வௌவி நீயும் உயர்வடைந்தாய்

வானரமாய் வந்த வாயுமைந்தனே போற்றி

அகரமுதல எழுத்தெல்லாம் ஹனுமனுக்கர்ப்பணிக்க

அறிவிலி ஆசை கொண்டேன் ஆழம் அறியாமலே

ஈங்கீண்டு இயம்பிவிட்டேன் இச்சைகொண்டு இவ்வண்ணம்

வாயுமகன் பிழை பொறுத்து வினை தீர்த்து அருளட்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக