திங்கள், 20 மே, 2019

நரஸிம்மாவதாரம் - அந்தாதி

ராகமாலிகை - தாளம்:ஆதி  

 

1.சுத்ததன்யாசி :

பரமன்  எடுத்த  பத்தவதாரங்களில்

நரஸிம்மமாய்  வந்தான்  நான்காவதிலே

பரலோகத்தில்  ஒருவன்  தான் பெற்ற சாபத்தினால்

ஹிரணியன் எனும்  பெயரில்  அரக்கனாய்  வந்துதித்தான்


2.பாகேஸ்ரீ :

வந்துதித்த ஹிரணியன்  நந்தகோபன் மகனை

எந்த நாளும்  நிந்தனையே  செய்துவந்தான்

சந்ததி கருதி அவன்  சந்ததமும்  தவமிருந்தான்

வந்த மைந்தன் பிரஹலாதன்  தந்தைக்கெதிர் வாதம் செய்தான்


 3.தர்மவதி :

வாதம் செய்து வழக்காடி  நாரணனே  தெய்வமென்று

பாதகனாம்  தந்தை  உய்ய உறுதியாய்  நின்றான்

செருக்குற்ற  ஹிரணியனும்  தானே இறை என்றான்

திருமால் நாமமதை  செப்பிட தடை  விதித்தான்


4.கரஹரப்ரியா :

தடை விதித்த  தலைவன்  சொல்கேட்டு  குடியனைத்தும்

மடை திறந்தாற் போல் அவன்  நாமமதை  நவின்றிடவும்

மாதரசி மணிவயிற்றில் வந்த மகன் பிரஹலாதன்

காதலாகி  ஓம்  நமோ  நாராயணா  என்றான்

(ஓயாமல்  ஓம் நமோ நாராயணா  என்றான் )


5.ரேவதி :

என்றவன் எப்பொழுதும்  மாயனை துதித்திடவும்

ஈன்றவன்  விசனமும் பின்  சினமும்  அடைந்தான்

கன்றை ஒரு பசு  அழிக்கும் கதை கேட்டதுண்டோ

அன்றைக்கவன்  மகனை  கொல்ல  பலவிதமாய்  முயன்றான்


6.குந்தலவராளி :

முயன்றவன்  தோல்வியுற  மைந்தனும்  பிழைத்து வந்தான்

முயற்சியனைத்தையுமே  பரமன்  முறியடித்தான்

பரமன் எங்கே என்று  பிள்ளையைக்  காட்டச்சொன்னான்

வரமதால் வந்த மகன்  எங்கும் இறை உள்ளதென்றான்


7.கானடா :

எங்கும் இறை உள்ளதென்று  மகன் சொல்ல  கேட்ட மன்னன்

அங்கிருந்த ஓர் தூணினை  ஓங்கிப் பிளந்தனன்

பிளந்ததும்  நரஸிம்மமாய்  வந்த உரு  கண்டு மன்னன்

தளர்ந்து  விதிர் விதிர்த்து  நிலை குலைந்து நின்றான்


8.பிலஹரி:

நின்றவனை பாய்ந்தெடுத்து  நிலையில் அமர்ந்து  மடியிலிட்டு

பரலோகத்தில் அளித்த வரமதை நினைவில் கொண்டு

நரனும்  மிருகமுமாய்  அந்தி பகல் சேர்  சந்தியில்

கொன்று குடலுறுவி  மீட்சி அளித்தான்


9.பிருந்தாவன சாரங்கா:

மீட்சியளித்து  சாந்தமாகி  மதலைக்கு  முடி சூட்டி

ஆட்சி செய்ய  ஆசி செய்து திரும்பினான் வைகுண்டம்

காட்சிக்கினிய  அந்த நரஹரி ரூபம்

மாட்சிமை பொருந்திய  அவதாரம்

நரசிம்ம ரூபமதை  தொழுதாலே  வைபோகமே

வரமெலாம்  தந்திடுமே  அற்புத ரூபம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக